Monday, January 18, 2010

யாருமில்லை என்பதால்.............

1.
யாருமில்லை என்பதால்
பேசிக்கொண்டு இருந்தேன்.
வருத்தப்படுவேனே என்பதால்
கேட்டுக்கொண்டும் இருந்தேன்.

2.
தலைகீழாக தொங்கியபடி
எப்படிநடக்கிறான்?
என்கிற கேள்வி
வவ்வாலுக்கு இருக்குமோ
என்கிற கேள்வி எனக்கு.

3.
எல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.

4.
குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.

5.
மீன் தொட்டியில் இட்டு வளர்க்கும்
குழந்தை என நெளிவாள்
சம்பள நாளில்
இவள் எப்போதும்.

No comments:

Post a Comment